Friday, March 18, 2022

காங்கிரஸ் பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி தலைமையை ஏற்க தயார்?


காங்கிரஸ் பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி தலைமையை ஏற்க தயார்?


வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக இறுக்கத்தை தளர்த்தியும் வளைந்தும் காங்கிரஸ் கொடுக்கும். பாஜகவை எதிர்க்க பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையையும் காங்கிரஸ் ஏற்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். இந்நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல், காங்கிரஸின் பலவீனம், காங்கிரஸ் செய்ய வேண்டிய மீள் கட்டமைப்புப் பணிகள் எனப் பலவற்றையும் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். ஜி 23 என்ற காங்கிரஸின் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில் சிதம்பரத்தின் பேட்டி கவனம் பெறுகிறது.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி தொடர்பாக மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். “தேர்தல் தோல்விக்குப் பிறகு தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் முன்வந்தனர். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி அதை ஏற்கவில்லை. காங்கிரஸுக்கு புதிய நிரந்தரத் தலைமையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே காரிய கமிட்டியின் விருப்பம். அதற்கான தேர்தல் நடைபெற ஆகஸ்ட் வரை ஆகலாம். அதுவரை சோனியா தலைமையில்தான் நாங்கள் பணியாற்றப் போகிறோம்.

ஜி - 23 தலைவர்கள் காந்தி குடும்பத்தினர் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். என்னைப் பொறுத்த வரை காந்தி குடும்பத்தினரை மட்டுமே தேர்தல் தோல்விக்குக் கைகாட்டுவது சரி அல்ல. தேர்தல் தோல்விக்கு அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இங்கு யாருமே பொறுப்பைத் தட்டிக் கழிக்கவில்லை. பொறுப்பு என்பது சோனியா, பிரியங்கா, ராகுல் மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், வட்டம் என அனைத்து காங்கிரஸ் உறுப்பினருக்கும் பொறுப்பு உள்ளது. எனவே, தோல்விக்கு அகில இந்திய தலைமை மட்டும் பொறுப்பாகாது. நிரந்தரத் தலைவரை உடனே அறிவிக்கக் கோருகிறார்கள். ஆகஸ்டில் தேர்தல் நடத்தி அறிவிப்போம் என நாங்கள் சொல்கிறோம். ஆகஸ்டில் கட்சிக்கு நிரந்தரத் தலைமை கிடைக்கும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஆகையால் ஆகஸ்ட் வரை காங்கிரஸ் கட்சியில் விரிவான சீர்த்திருத்தங்களை செய்யப்பட வேண்டும். அதற்குள் கட்சியில் பிளவு எதுவும் ஏற்படாது என்று நம்புகிறேன். கட்சியில் பிளவை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று ஜி - 23 தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் நிச்சயமாக சில விஷயங்களில் இறுக்கத்தைத் தளர்த்தும். வளைந்து கொடுத்தே போகும். இது மம்தாவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் பொருந்தும். மாநில வாரியாக பாஜக எதிர்ப்பு அணியை வலுப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுடன் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டியுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையின் கீழ் நாங்கள் பாஜகவை எதிர்க்கத் தயாராக உள்ளோம். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்ப்பை வலுப்படுத்தினால் பாஜகவை வீழ்த்துவது எளிதாகும்.

காங்கிரஸின் பலவீனம் என்றால், மாநில அளவிலான பலவீனங்கள்தான். நிறைய மாநிலங்களில் காங்கிரஸ் சிதிலமடைந்திருக்கிறது. அங்கெல்லாம் காங்கிரஸ் கமிட்டியைக் கலைத்துவிட்டு புதிதாக வட்ட அளவிலிருந்து கட்சியைக் கட்டமைக்க வேண்டும். இந்த பலவீனத்தை தலைமையிடம் எடுத்துரைத்துள்ளேன். இதைத்தான் ஜி-23யின் குலாம் நபி ஆசாத், கபில் சிபலும் வலியுறுத்துகின்றனர். நிறைய இடங்களில் காங்கிரஸுக்கு தலைவர்களே இல்லை. தொண்டர்கள்தான் இருக்கின்றனர். அரசியலில் ஈடுபாடு கொண்டோரை அடையாளம் கண்டு கட்சிப் பொறுப்புகளில் அமர்த்த வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் கட்சிக்காக 24/7 நேரம் உழைக்கும் தலைவர்கள் வேண்டும். முக்கியமாக அவர்கள் 40, 50, 60 வயதைத் தாண்டாதவர்களாக இருக்க வேண்டும். இந்தக் கட்டமைப்புப் பணிக்காக நிதி ஆதாரம் வேண்டும். எல்லா இடங்களுக்கும் நிதி சென்று சேர்ந்தால்தான் மீள் கட்டமைப்பு சாத்தியம்" என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment